வசந்த முதலிகே புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து அதிருப்தி -சர்வதேச மன்னிப்பு சபை

Kanimoli
2 years ago
வசந்த முதலிகே புலனாய்வுப் பிரிவில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து  அதிருப்தி -சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தாம் அதிருப்தியடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிரிவு இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

முதலிகே மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட குறைந்தது பத்து பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்ப்பாளர்களின் குடியியல் ஒத்துழையாமைச் செயல்களுக்கு எதிராக கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்த வேண்டாம் என்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

அதற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

எதிர்ப்பாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்றும் சர்வதேச மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.