மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் இப்போதும் நடந்துகொள்கின்றது -நாமல் ராஜபக்ச

Kanimoli
1 year ago
 மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் இப்போதும் நடந்துகொள்கின்றது -நாமல் ராஜபக்ச

மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் இப்போதும் நடந்துகொள்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணியில் ஓரளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால், மே 9 அன்று அவர்கள் நடந்துகொண்ட விதம் 88 மற்றும் 89 காலகட்டங்களின் நடத்தையை காட்டுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாகவே நான் நினைத்தேன்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது அப்படித் தெரியவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட நடைமுறை விடயங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் தனது சொந்தக் கொள்கைகளுக்கும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.