ஆசிரியர் பற்றாக்குறையால் பெறும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள்

Kanimoli
1 year ago
ஆசிரியர் பற்றாக்குறையால் பெறும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள்

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மஸ்கெலியா நல்லத்தண்ணி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பெறும் இன்னல்களை சந்தித்து வருவதாக பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறிப்பிட்ட பாடசாலையில் வெறுமனே 17 ஆசிரியர்கள் மாத்திரமே பணியில் இருப்பதாகவும் அதேசமயத்தில் பாடவேளையில் அனேகமான வகுப்புக்கள் ஆசிரியர்களின்றி எவ்வித கல்வி நடவடிக்கைகளும் இன்றி வெறுமையாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக இந்நிலை தொடர்கின்ற நிலையில் இப்பாடசாலையிலிருந்து இடம்மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காக எவ்வித ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையெனவும் அதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஹட்டன் வலய கல்வி பணிமனை இதற்கான முறையான தீர்வினையும் ஆசிரியர்களை உடன் நியமிக்குமாறு பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.