கோட்டாபயவினால்  நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு தொடர்பில் வெளியான தகவல்

Kanimoli
1 year ago
கோட்டாபயவினால்  நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்  புதிய அரசியலமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமது  அறிக்கையைத் தொகுக்கத் தவறிவிட்டது. அதே நேரத்தில் முறையான அனுமதிகளைப் பெறாமல் குழுவின்  நடவடிக்கைகளுக்காக,  வரி செலுத்துவோரின் மில்லியன் ரூபாய்  நிதி செலவிடப்பட்டதாக, கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2020 அக்டோபரில் இந்தக் குழுவின் ஆரம்பக் கூட்டம் நடத்தப்பட்ட போதிலும், 2021 டிசம்பரில் கூட அரசியலமைப்பை உருவாக்க முடியவில்லை. எனினும் குழு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை முடிக்கப்பட வேண்டும் என்று முன்னதாக காலம் வரையறுக்கப்பட்டிருந்தது.


2020, செப்டம்பர் 10 ஆம் திகதி அன்று, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செலவினங்களை ஈடுகட்ட 100 மில்லியன் ரூபாவை  ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.


எனினும் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி வரை, கணக்காய்வு  மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை.


இதேவேளை கணக்காய்வு அறிக்கையின்படி, வாடகை செலுத்துதல் போன்ற பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. 816,480 ரூபாய் பெறுமதியான  பயன்படுத்தப்படாத மூன்று அலுவலக அறைகள் மற்றும் பயன்படுத்தப்படாத அலுவலக உபகரணங்களின் மதிப்பு 435,348 ரூபாய் போன்ற  வீண் செலவுகள் ஏற்பட்டுள்ளன. 


குழு, மேற்கொண்ட செலவுகளின்படி, அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக 3,100,000 ரூபாய்  செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமர்வுக்கும் ஒரு உறுப்பினருக்கு 25,000 ரூபாவும் பயணப்படியாக 5,000 ரூபாவாகவும்  செலவிடப்பட்டுள்ளது.


குழுவின் ஒருங்கிணைப்பாளரின் மாதாந்த உதவித்தொகைக்கு  600,000 ரூபாவும், ஒவ்வொரு அமர்வுக்கும் 100,000 ரூபாவும், முழுநேர ஆராய்ச்சி உதவியாளரின் மாதாந்த கொடுப்பனவுக்கு 2,600,000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. எனினும் இந்த  கட்டணங்களுக்கு ஒப்புதல் பெறப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.