இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கை ஜனாதிபதி அழைத்தபோதும்,சந்தேகம் தொடர்வதாக பிரபல செய்தித்தாள் குற்றச்சாட்டு

Prasu
3 years ago
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கை ஜனாதிபதி அழைத்தபோதும்,சந்தேகம் தொடர்வதாக பிரபல செய்தித்தாள் குற்றச்சாட்டு

இலங்கையின் தமிழ் கட்சிகளை இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்தபோதும்,சந்தேகம் தொடர்வதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

சந்திப்புக்கான திகதி இன்னும் கிடைக்காமை காரணமாகவே, தமிழ் அரசியல்வாதிகள் சந்தேகம் வெளியிட்டு வருவதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தமிழ்;க்கட்சிகளை விவாதத்துக்கு அழைத்தார்.அத்துடன் 2023 பிப்ரவரி 4 ஆம் திகதி, நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உறுதியளித்தார். 

இலங்கைத் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் தீவின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்தனர் எனினும் தவறாமல் தோல்வியடைந்துள்ளனர். 

2015 மற்றும் 2019 க்கு இடையில் ஆட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம், புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்தது.

ஆனால் பணியை முடிக்கவில்லை, இது அவர்களின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. .

இந்தநிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க, எமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதனை வடக்கு மற்றும் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகப்பெரிய குழுவான தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

இந்த விடயத்தில் முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், 89 வயதான நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் குறிப்பிட்டதாக ஹிந்து தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக பல்வேறு சிங்களத் தலைவர்களுடன் அரசியல் தீர்வொன்றை மேற்கொள்ள முயற்சித்து வரும் நிலையில், ஜனாதிபதியின் உறுதிமொழி இந்ததடவை உண்மையானதாக இருக்கும் என நம்புவதாக அவர்; தெரிவித்துள்ளார். 

அதேநேரம் ஒற்றையாட்சி அரசியலமைப்பை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கைத் தலைமை தயாராக வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் 'தீவிரத்தன்மை' குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ள கூட்டமைப்பு, எனினும் அந்த சந்திப்பில் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இந்த சந்திப்பு குறித்து கேட்டபோது, ஜனவரி யாழ்ப்பாணம் வருவதாக தெரிவித்தார்.

பின்னர் இந்த வார சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, வேண்டுமானால் இந்த வாரமே சந்திக்கலாம் என்று கூறினார். எனவே அவருடைய இந்த பதில்;களில் தீவிரத்தன்மையை காணமுடியவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.

அதிக அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வின் தேவை இலங்கையில் இந்திய ஈடுபாட்டின் மையமாகவும் உள்ளது. 

ஐக்;கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான தமது கடப்பாடுகள் குறித்து இந்தியா வலியுறுத்தியது.

இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் அதன் போதாமைகளை அடிக்கடி சுட்டிக்காட்டினாலும், இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த, இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில், சமஸ்டி என்ற கூட்டாட்சி கொள்கையை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தது வரவேற்கத்தக்கது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமது பார்வையில், ஜனாதிபதி விக்கிரமசிங்க கூட்டத்தை கூட்டினாலும் கூட, கூட்டாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்கும் வரை, பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரையை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டாட்சியை நிராகரித்தார் என்று கூறினார். 

அப்படியானால், அவருடன் எதைப் பற்றி பேசுவது?  அவர் தனது அரசாங்கம் சட்டபூர்வமானது, நிலையானது, மேலும் அவர் அனைத்து தரப்புடன் பேசுகிறது என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறார் என்று கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதி, தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உறுதிமொழியில் நேர்மையாக இருந்தால், கூட்டாட்சி என்பது இந்தப் பேச்சுக்களுக்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும். 

சிங்கள மக்களிடம் பொய் சொல்லாமல், அவர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்

தென்பகுதி மக்கள் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். அத்துடன், தம்மை முன்னிலைப்படுத்தி போர் புரிந்ததையும், தம்மை முன்னிலைப்படுத்தி, இனவாதக்கொள்கைகளை கடைப்பிடிப்பதையும் சிங்கள மக்கள் உணர்கிறார்கள்.

எனவே ஒரு நாடாக, இப்போது ஒன்றாகச் செயல்பட முடிந்தால், நிச்சயமாக பிரச்;சினைகளை தீர்க்கமுடியும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4