பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த நபரை சோதனையிட்டவருக்கு அதிர்ச்சி!
பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளாக காது கேட்காமல் இருந்த நபருக்கு திடீரென செவித்திறன் வந்ததை எண்ணி மிகவும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறார்.
பிரித்தானியாவில் டோர்செட்டில் உள்ள வேய்மவுத் பகுதியைச் சேர்ந்தவர் வாலஸ் லீ என்பவரின் வாழ்க்கையிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இவருக்கு திடீரென காது கேட்காமல் போயிருக்கிறது. ரக்பி கால்பந்தாட்டத்தின் போது அல்லது விமானத் துறையில் இருந்த போது ஏற்பட்ட காயம் அதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பி இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இருக்கையில் அண்மையில் வீட்டில் பயன்படுத்தக் கூடிய எண்டோஸ்கோபி கிட்டை வாங்கி பரிசோதித்து பார்த்ததில் வாலஸ் லீயின் காதில் வெள்ளை நிறத்தில் earbud சிக்கியிருந்ததை கண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான் தனக்கு இத்தனை காலமாக காது கேட்காமல் போய்விட்டது என உறுதிப்படுத்திக்கொண்டு உடனடியாக மருத்துவரை வாலஸ் லீ அணுகியிருக்கிறார்.
இதனையடுத்து மருத்துவர் பரிசோதித்ததில் இயர்பட் இருந்ததை கண்டதும் வாலஸ் லீயின் காதில் இருந்து வெளியே எடுக்க முதலில் முயற்சித்திருக்கிறார். ஆனால் காதில் உள்ள மெழுகில் நன்றாக அந்த இயர்பட் ஒட்டியதோடு பல ஆண்டுகளாக உள்ளேயே இருந்ததால் வெளியே எடுப்பதில் சற்று சவால் நிறைந்திருக்கிறது.
ஆகையால் மினியேச்சர் ட்வீசர் மூலம் எனது காதில் நுழைத்து அதனை மருத்துவர் ஒரு வழியாக வெளியே எடுத்துவிட்டார். அந்த இயர்பட் வெளியே வரும் போது பாப் அப் ஆனதை நன்றாக உணர முடிந்ததாகவும் வாலஸ் லீ தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள 66 வயதான வாலஸ் லீ, “இயர்பட் வெளியே வந்ததும் உடனடியாக அந்த அறையில் இருந்த அனைத்தையும் என்னால் கேட்க முடிந்தது. என் தலையில் இதுநாள் வரை உணர்ந்த அந்த பனிமூட்டம் விலகியது தெரிந்தது. என்னால் இப்போது நன்றாகவே கேட்க முடிகிறது.” என்றிருக்கிறார்.
மேலும், “5 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உள்ள என் குடும்பத்தினரை பார்க்கச் சென்றபோது இந்த earbuds-ஐ வாங்கியிருந்தேன். அப்போதுதான் என் காதில் அது சிக்கியிருக்கக் கூடும்” எனவும் வாலஸ் லீ கூறியுள்ளார்.
தொழில்நுட்ப சாதனங்கள் எந்த அளவுக்கு உதவியாக இருந்தாலும் அதே அளவுக்கு இடைஞ்சலையும் கொடுக்கக் கூடியவையாகவே இருக்கும் என்பது வாலஸ் லீயின் இந்த ஐந்தாண்டு போராட்டத்தின் மூலம் அறியலாம். ஆகவே சிறிய அளவிலான கேட்ஜெட்களை மிகவும் கவனமாகவே கையாள வேண்டும் என்பதே இந்த சம்பவம் உணர்த்தும் பாடமாக இருக்கும்.