ரணில் விக்ரமசிங்க உண்மையான முயற்சிகளை எடுத்தால் மட்டுமே ஆதரவை வழங்கும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உண்மையான முயற்சிகளை எடுத்தால் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது.
இதற்கு மாறாக இவ்வாறான தீர்வுகள் வெறுமனே பூசி மெழுகுவதாக இருந்தால் அதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அர்த்தபூர்வமான அதிகாரப் பரவலுடன் கூடிய சமஷ்டி முறையிலான அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
சமஷ்டி முறை அதிகாரப்பரவலாக்க நாடுகளே இன்று உலகில் பலம் வாய்ந்த நாடுகளாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், 1926இல் பண்டாரநாயக்காவே முதலில் சமஷ்டி முறை குறித்து பேசியதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்கள் மீதான வரி அகற்றப்பட்டால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உல்லாசப் பயணிகளாக வெளிநாட்டு நாணயத்துடன் நாட்டுக்குள் வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



