அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் மொட்டுக்கட்சிக்குள் அமைதியின்மை

மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் மொட்டுக்கட்சிக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்க வேண்டுமென்றே அமைச்சரவை மாற்றத்தை நாளுக்கு நாள் ஒத்திவைப்பதாகவும் மொட்டுக்கட்சியின் சிரேஷ்டர்களும், இளையவர்களும் கடுமையாக குற்றம் சுமத்தி வருவதாக அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும், குழுக்கூட்டங்களில் கூட மொட்டுக்கட்சியின் சிரேஷ்டர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களுக்கும், அமைச்சு பதவி வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் ஜனாதிபதி அதனைச் செய்யவில்லை எனவும் நம்பகமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் மொட்டுக்கட்சியின் உறுப்பினர்கள்
அத்துடன் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் தமது பிரதேசத்தில் எவ்வித பணிகளையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மொட்டுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புலம்பெயர்ந்த அனுபவமும் போதிய அறிவும் இல்லாத காரணத்தினால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்த நளின் பெர்னாண்டோ போன்றவர்கள் நேரடியாக அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்று, மொட்டுக்கட்சி சிரேஷ்டர்களை புறக்கணிக்கும் நிலைமை மோசமாகியுள்ளதாக மொட்டுக்கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



