மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று மீண்டும் அமைச்சரவையில்

கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் விவாதிக்கப்பட உள்ளது.
உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஒத்திவைக்க கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்ததோடு, அமைச்சரவைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைய இவ்வருடம் வெட்டுக்கள் இன்றி மின்சாரத்தை வழங்குவதே இந்த மின் கட்டண திருத்தத்தின் நோக்கமாகும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதன்படி, 2023ஆம் ஆண்டு மின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப கட்டணங்களை திருத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த திருத்தத்தின் ஊடாக 60 தொடக்கம் 65 வீதம் வரை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன்படி 29.14 ரூபாவாகவுள்ள மின் அலகு ஒன்றின் விலை 48.42 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
ஜனவரி மாதக் கட்டணத்தில் இருந்து அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை மின்சார நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார்.



