இலங்கையில் ஜனாதிபதி மாறினாலும், மனித உரிமைகள் பதிவில் முன்னேற்றமில்லை - பிரித்தானியா கண்டனம்
அண்மையில் தைப்பொங்கலை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு சென்றமை யாவரும் அறிந்ததே.
அவரின் யாழ்ப்பாண விஜயத்தை எதிர்த்து, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இக் கைதை தான் கண்டிப்பதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார். மேலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மனிதனின் அடிப்படை உரிமை எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 இல் இலங்கையில் ஜனாதிபதிகள் மாற்றப்பட்டதன் மூலம் நாட்டின் மனித உரிமைகள் பதிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய மதிப்பீட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.