கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு எதிரான இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கா மற்றும் பல புதிய அதிகாரிகளின் பணி இடைநிறுத்தத்தை நாளை வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் சட்டவிரோதமானது என தெரிவித்து அதன் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
அதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலதிக விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்ததுடன், தடை உத்தரவை நாளை வரை நீடிக்க உத்தரவிட்டது.
இந்த மனு பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றத்தில் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து மனுவை நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மனுதாரருக்கு எதிரான முறைகேடு சம்பவம் குறித்து விளையாட்டு விசாரணைக் குழு விசாரணை நடத்தி அவருக்கு எதிராக பரிந்துரைகளை வழங்கியதாகவும், அதற்கு எதிராக மனுதாரர் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.
எனவே, கால்பந்து சம்மேளனத்தின் பதவிகளுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் தகுதி அவருக்கு இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த மனுவை எந்த சட்ட அடிப்படையும் இல்லாததால் நிராகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
கால்பந்து சம்மேளனத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபை சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரினார்.
தடை உத்தரவு நீடிக்கப்படுமானால் உதைபந்தாட்ட நிர்வாகம் சீர்குலைந்து போகும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.