இலங்கையில் மின் துண்டிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல், பரீட்சை நிறைவடைந்ததன் பின் மாலை மற்றும் இரவில் 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சளார் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாட்டுக்கு முன்வைத்த பரிந்துரைகளை மின்சார சபை அமுல்படுத்தாத காரணத்தினால் நேற்றைய தினம் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி முடிவடையும் வரை மின்பாவனைக்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அந்த செயற்திட்டத்திற்கு அமைய மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் மின்பாவனைக்கான கேள்வியை குறைத்து 350 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
350 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை இரவு வேளைகளில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க ஆணைக்குழு விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொது மக்களும், அரச மற்றும் தனியார் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.