இன்றைய வேத வசனம் 06.02.2023:உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 06.02.2023:உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு

யார் நீதிமான்? என்று ஒரு கேள்வி எழுப்பினால், தேவாலயத்துக்கு செல்லும் அனைவரும் நாங்கள் நீதிமான் என்றுச் சொல்வார்கள்.

ஆனால், பரிசுத்த வேதாகமம் அடிப்படையில் யாரை நீதிமான் என்று வசனம் சொல்லுகிறது என்று பார்ப்போமேயானால்.

லூக்கா 6:32 -ல் உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. என்பதாக சொல்கிறது.

அதாவது, நம்முடைய ஆண்டவருடைய பார்வையில், நான் என்னை நேசிப்பவர்களையே நேசித்தால் நான் பாவிகளின் லிஸ்டில் தான் இருக்கிறேன் என்பதாக அந்த வசனம் கூறுகிறது.

ஆனால், நான் என்னை பகைக்கிறவர்களையும், வெறுக்கிறவர்களையும் நான் நேசித்தால் நான் பரிசுத்தவான்களின் லிஸ்டில் இருப்பதாகவும் அந்த வசனம் சொல்கிறது.

அதற்கு அடுத்த வசனத்தை நீங்கள் பார்த்தீர்களானால், உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. (லூக்கா 6:33)
அதாவது, எனக்கு நன்மை செய்கிறவர்களுக்கு நான் பதிலுக்கு நன்மை செய்வேன் என்றால், நான் ஆண்டவருடைய பார்வையில் பாவி என்பதாக அந்த வசனம் சொல்கிறது.

ஆனால், எனக்கு தீமை செய்தவர்களுக்கு நான் நன்மை செய்கிறவனாகயிருந்தால் அந்த வசனத்தின் படி நான் நீதிமானாக்கப்படுகிறேன்.

சபையில் நான் போட்டி போட்டு வேதம் வாசிப்பதால் நான் நீதிமானாக முடியாது. கையைத் தட்டி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறதினால் நான் நீதிமானாக முடியாது.

அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு எரிச்சல் உண்டாகும் அளவிற்கு மலட்டுக் கூச்சல் போடுகிறதினால் நான் நீதிமானக முடியாது.

காணிக்கையை நான் அள்ளி அள்ளிக் கொடுக்கிறதினால் நான் நீதிமானக முடியாது. ஊருக்கெல்லாம் கேட்கிற மாதிரி நான் கத்தி கத்தி ஜெபிப்பதினால் நான் நீதிமானாகிவிடமுடியாது!

ஆண்டவருடைய பார்வையில் தமக்கு நன்மை செய்யாதவனுக்கும் நன்மை செய்பவன் தான் நீதிமான்! தம்மை வெறுத்து பகைப்பவனையும் நேசிப்பவன் தான் நீதிமான்!

அக்கம்பக்கத்தினர்களின் நடுவில் சாட்சியாக வாழ்பவன் தான் நீதிமான் என்று ஆண்டவர் இந்த வசனத்தின் மூலம் போதிக்கிறார்.

நம்மை நாமே நீதிமான் என்று சொல்வது மிகவும் எளிதான காரியம்! ஆனால், நம்மைப் பார்த்து ஆண்டவர் நீதிமான் என்று சொல்வாரா? என்பதுதான் முக்கியம்.

நான் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன், மாய்மாலமான கிறிஸ்தவ வாழ்க்கையை விட்டு வெளியே வந்து ஆண்டவர் எதிர்பார்க்கிற உண்மையான நீதிமான்களாய் ஜீவிக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக! ஆமென்!! அல்லேலூயா!!!