வரிகள் தொடர்பாக கலந்துரையாட ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிபுணர்களுக்கு அழைப்பு
புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழுக் கூட்டமும் நாளைய தினம் கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதாக அதன் அங்கத்துவ அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கடந்த வாரம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவகாசம் கோரியுள்ளது.
இதன்படி, இன்று கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதைத் தவிர ஏனைய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்க முன்னணி தயாராக இல்லை எனவும் கலாநிதி சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.