இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)
மேஷம்
ராசிநாதன் செவ்வாய் பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பது ஆற்றலையும் மனோபலத்தையும் வழங்கும். லாப ஸ்தான கிரகங்களின் சேர்க்கை, நீண்ட கால விருப்பங்கள் யாவும் நிறைவேறப்போவதைக் குறிக்கிறது.
பழைய முதலீடுகள் அல்லது சட்ட ரீதியான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சுப செய்திகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் இணக்கமான சூழல் நிலவும்.
அரசியல் பிரமுகர் சந்திப்புகள் சமூக அந்தஸ்தை உயர்த்தும். தொழில் ரீதியாக இது ஒரு பொற்காலம். வணிக முயற்சிகள் புதிய உச்சத்தைத் தொடும்.
புதிய கிளைகளைத் தொடங்க இது மிகச் சிறந்த தருணம். நிதிநிலை சீராக இருப்பதுடன் பல வழிகளில் இருந்து பணவரவு உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளைத் தவிர்க்கவும். அனுமனுக்குச் செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது, தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது தனிப்பட்ட சாதனை செய்ய உதவும்.
ரிஷபம்
தொழில் ஸ்தானத்தில் நிலவும் கிரக நிலைகள், வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொடுக்கும். சமூக அந்தஸ்தில் நிலையான உயர்வும், நிலுவையில் இருந்த அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
பதவி உயர்வு, புதிய தலைமைப் பொறுப்பு குறித்த நற்செய்திகளை எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
அதிகார மட்டத்தில் உள்ளவர்களுடன் பேசும்போது நிதானம் அவசியம். சுக்கிரன், புதன் சேர்க்கையால் தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்குப் புத்திசாலித்தனம் மிளிரும்.
சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும், மகா மிருத்யுஞ்சய மந்திரத்தைப் பாராயணம் செய்வது, சரிவிகித உணவு, போதிய உறக்கம் ஆகியவை நல்லது.
மிதுனம்
ஆன்மீக வளர்ச்சியும் அறிவுப்பூர்வ செயல்களும் நிறைந்த வாரம். ராசிநாதன் புதன், ஒன்பதாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிப்பதால், புதிய சிந்தனைகள் மற்றும் திடீர் திருப்புமுனைகள் ஏற்படும்.
வெளிநாடு, உயர்கல்வி தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள், பெரியோர்களுடனான உறவு பலப்படும். மேல்தட்டு மக்களுடனான தொடர்புகள் உங்கள் எதிர்காலத்திற்கு நலம் பயக்கும்.
ஆலோசனை வழங்கல், ஊடகம், சர்வதேச வணிகத்தில் இருப்பவர்களுக்குப் பொருளாதார ரீதியாகச் சிறப்பான பலன்கள் கிட்டும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இது அனுகூலமான காலம்.
அவ்வப்போது அலைச்சல்கள் ஏற்படக்கூடும். பச்சைப்பயறு தானம் செய்வதும், தியானம் மேற்கொள்வதும், உறங்குவதற்கு முன் மொபைல் போனை பார்ப்பதைத் தவிர்ப்பது மன, உடல் ஆற்றலை அதிகரிக்கும்.
கடகம்
மாற்றங்களை மிகுந்த கவனத்துடனும் செய்ய வேண்டிய சூழல். முன்னோர்களின் சொத்து, காப்பீடு மூலம் எதிர்பாராத ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உறவுமுறைகளில் மென்மையான அணுகுமுறை தேவை. குடும்பத்தினரிடம் வெளிப்படையாக இருப்பது, உயர் பதவியில் உள்ளவர்களிடம் பேசும்போது விவேகத்துடன் செயல்படுவது கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க உதவும்.
தொழில், நிதி விஷயங்களில் அவசர முதலீடுகளைத் தவிர்த்து, இருக்கும் வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தவும். வணிகர்களுக்கு வார இறுதியில் வேகம் கூடும்.
செரிமான மண்டலம், பருவகால வியாதி குறித்து விழிப்புணர்வு அவசியம். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது, சந்திர துதியை பாராயணம் செய்வதும், போதிய நீர் அருந்துவதும் உடல் நலத்தைப் பேண உதவும்.
சிம்மம்
சூரியன் சஞ்சாரத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் பொது வாழ்வில் அங்கீகாரம் கிடைக்கும். சமூக அளவில் உங்கள் தனிப்பட்ட சாதனைகள் மிகுந்த திருப்தி தரும்.
வாழ்க்கைத் துணை, கூட்டாளிகளுடனான உறவு இனிமையாக இருக்கும். அரசியல் பிரமுகர்கள், சக போட்டியாளர்களிடம் பழகும்போது, நிதானம், மென்மையைக் கடைபிடிக்கவும்.
உத்தியோகத்தில் உங்கள் தலைமைப் பண்பு பாராட்டப்படும். அது வணிக ரீதியான வெற்றிக்கும் புதிய கூட்டு முயற்சிகளுக்கும் வழிவகுக்கும்.
பொதுத்தொடர்புகள் மூலம் பணப்புழக்கம் சீராக இருக்கும். முறையான உடற்பயிற்சி, ஓய்வின் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம். ஆதித்ய ஹிருதயம் பாராயணம், பொதுச்சேவைகள் செய்வது உங்கள் ஆற்றலை கூட்டி மேன்மேலும் வளங்களை ஈர்க்கும்.
கன்னி
எதிரிகளை வெல்வதற்கும், நீண்ட கால ஆரோக்கியக் கவலைகளிலிருந்து விடுபடுவதற்கும் இந்த வாரம் வழிவகுக்கும். உங்கள் நுணுக்கமான செயல்பாடுகள் வாரத்தின் இறுதியில் நல்ல பலன்களைத் தரும்.
சட்ட விவகாரங்கள், போட்டித் தேர்வுகளில் சாதகமான செய்திகள் வரும். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கும். செல்வாக்கு மிக்க அரசியல் தொடர்பு மூலம் உங்கள் சமூக அந்தஸ்து மேம்படும்.
தொழில், நிதி நிலை ஏறுமுகத்தில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமான பணி மாற்றம் உண்டு. வணிகர்கள் தங்கள் தடைகளைத் தகர்த்தெறிவார்கள்.
கடின உழைப்பின் மூலம் நிதி ஆதாயம் நிச்சயம். அதிகப்படியான வேலைப்பளுவைத் தவிர்க்கவும். பசுவிற்குப் பசுந்தீவனம் வழங்குவதும், அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுச் செய்வதும் பதற்றத்தைக் குறைத்து, தொழில் திறனை மேம்படுத்தும் நடைமுறைப் பரிகாரமாகும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இந்த வாரம் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறன் மிளிரும் வாரமாக அமையும். குழந்தைகள் அல்லது கலை சார்ந்த திட்டங்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
கலை, கல்வி மற்றும் ஊக வணிகத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைச் செய்வீர்கள். காதல் உறவுகள் மலரும். அரசியல் மற்றும் உயரடுக்குச் சமூகத்தினருடனான தொடர்புகள் ஆதாயம் அளிப்பதாக அமையும்.
படைப்புத் துறை, நிதித் திட்டமிடல் துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலம். வணிகர்கள் சந்தையை விரிவுபடுத்த வழி கண்டறிவார்கள்.
பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். நிதிநிலை திருப்தி தரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. மகாலட்சுமிக்கு வழிபாடு செய்து, ஏழைகளுக்கு வெள்ளை நிற இனிப்புகளை வழங்குவது நல்லது.
விருச்சிகம்
இந்த வாரம் குடும்ப அமைதி மற்றும் வீட்டுக்கான வசதிகளைப் பெருக்குவதில் கவனம் செலுத்துவீர்கள். நிலம் அல்லது வாகனம் வாங்குவது குறித்த சுப செய்திகள் வரக்கூடும்.
வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படக்கூடும். பண விஷயத்தில் கவனம் தேவை. தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். செல்வாக்கு மிக்க அரசியல் தொடர்புகள் மூலம் எதிர்காலத்திற்கான உத்தரவாதம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட், சுரங்கம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் லாபகரமாக அமையும். வணிகர்கள் நீண்ட கால லாபத்திற்காகத் தங்கள் உள் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டும்.
இதயம், இரத்த அழுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும். அனுமன் சாலிசா பாராயணம், துவரம் பருப்பு தானம் சிறந்தது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது தொழில் வெற்றிக்குத் தேவையான மன அமைதியை வழங்கும்.
தனுசு
மூன்றாம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் தைரியத்தையும் பேச்சுத் திறமையையும் அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்களும் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளும் இந்த வாரம் அமையும்.
எழுத்து, பேச்சு அல்லது சமூகத் தலைமைப் பண்புகளில் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசியல் விவாதங்களில் உங்கள் ராஜதந்திரம் பாராட்டப்படும்.
விற்பனை, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பத் துறையினருக்குப் பதவி, சம்பள உயர்வு உண்டு. வணிகர்கள் தொழிலை விரிவுபடுத்தவும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் சிறந்த தருணம்.
நிதி வளர்ச்சி நிலையாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நெற்றியில் சந்தனத் திலகம் இடுவதும், மகாவிஷ்ணுவை வழிபடுவதும் அதிர்ஷ்டத்தை உயர்த்தும். இலக்குகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதுவது முயற்சி வெற்றியடைய உதவும்.
மகரம்
ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றுள்ளதாலும், இரண்டாம் வீட்டில் கிரகங்களின் சேர்க்கையாலும் நிதி நிலை மற்றும் குடும்ப உறவில் உள்ள மதிப்புகளுக்கு முக்கியத்துவம் கூடும்.
சொத்துக்கள் சேரும் காலம் இது. குடும்பத்தில் விசேஷங்கள் அல்லது எதிர்பாராத பண வரவு குறித்த செய்திகள் உங்களை மகிழ்விக்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
பெரிய பிரமுகர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. கடின உழைப்பிற்குத் தொழில் ரீதியாகத் தகுந்த பலன்கள் கிடைக்கும்.
வணிகர்கள் அதிக லாபத்தையும் சிறப்பான சரக்கு மேலாண்மையையும் காண்பார்கள். நீண்ட காலச் சேமிப்பிற்கு இது உகந்த காலம். பல், கண் தொடர்பான சிறு சிக்கல்கள் வரலாம்.
ஏழைகளுக்குக் கருப்பு நிற ஆடைகளைத் தானம் செய்வது, பேசும் முன் யோசிப்பதும், சீரான உணவு முறையும் உங்கள் சமூக மதிப்பையும், மன அமைதியையும் மேம்படுத்தும்.
கும்பம்
ராசியில் நான்கு கிரகங்கள் ஒன்றாக இணைந்திருப்பதால், இவ்வாரம் நீங்கள் மனதளவில் ஆற்றல் மையமாகத் திகழ்வீர்கள். இது ஒரு மறுபிறப்பு போன்ற காலம். அதனால் உங்கள் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களும், உங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றக்கூடிய நல்ல செய்திகளும் வரும். உங்கள் காந்த சக்தி அரசியல் பிரமுகர்களையும் சமூக ஆர்வலர்களையும் ஈர்க்கும்.
தொழில், நிதி நிலையில் இது ஒரு பொற்காலம். தொழிலை விரிவுபடுத்தவும் உயரிய அங்கீகாரம் பெறவும் வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பரச் செலவுகள் செய்யும் அளவிற்கு நிதி நிலை வலுவாக இருக்கும்.
ராகுவின் தாக்கத்தால் மன அமைதிக்குத் தியானம் தேவை. ருத்ர அபிஷேகம் செய்வது, அவசர முடிவுகளைத் தவிர்த்துத் தியானத்தில் ஈடுபடுவது, உங்கள் சாதனைகளை நிலையானதாக மாற்ற உதவும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இந்த வாரம் ஆன்மீக அமைதி மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளுக்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. வெளிநாடு பயணம், ஆன்மீகப் பயணம் குறித்த நல்ல செய்திகள் வந்து சேரும்.
தனிப்பட்ட ஆலோசனைகளும், நீண்ட காலத் திட்டங்களும் பெரிய வெற்றியைத் தரும். குடும்ப உறவுகள் சீராக இருக்கும். அரசியல் தொடர்புகளைத் தொழில்முறை ரீதியாக மட்டும் வைத்துக்கொள்வது நல்லது.
தொழில், நிதிநிலையில் செலவுகள் கூடினாலும், அவை எதிர்காலத்திற்கான முதலீடாகவே அமையும். ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு அபரிமித லாபம் கிடைக்கும்.
மன நலத்தில் கவனம், போதிய ஓய்வு தேவை. மஞ்சள் நிறப் பழங்களைத் தானம் செய்வது, எளிய யோகாசனம் செய்வது, நீர்நிலைகளுக்கு அருகில் ஓய்வெடுப்பது தெளிவான சிந்தனையை வழங்கும்.
(வீடியோ இங்கே )