அரச நிர்வாகத்தில் மாற்றம்: வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டத்தை மீண்டும் கொண்டுவர திட்டம்!
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சவால்களுக்கு மத்தியில், அரச நிறுவனங்களின் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் அதிகாரிகளுடனும் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் சலுகையை வழங்குவது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முறையான தீர்மானம் எட்டப்பட்டவுடன் அது குறித்து பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் அபயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்