கம்மன்பிலவின் இடத்தை பிடிக்கும் தயாசிறி ஜயசேகர!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படும் முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவு பிரதானி சுரேஷ் சலேயின் மடிக்கணினி (Laptop) மற்றும் கைப்பேசி விவகாரத்தில், உதய கம்மன்பிலவின் இடத்தை தயாசிறி ஜயசேகர கைப்பற்ற முற்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னதாக சுரேஷ் சலேயின் சட்டத்தரணியாக உதய கம்மன்பில செயற்பட்டிருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட தயாசிறி, சுரேஷ் சலேயின் மடிக்கணினியும் கைப்பேசியும் அவரது தனிப்பட்ட சொத்துக்கள் என்றும், அதனைப் பரிசோதிப்பதற்கோ அல்லது அதற்காக அவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் வாதாடியுள்ளார்.
எனினும், சட்டத்தரணியான தயாசிறி ஜயசேகரவின் இந்தத் கூற்றை அரசியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவையே தவிர, ஓய்வுபெற்ற அதிகாரியின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருக்க வேண்டியவை அல்ல என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற 52 நாள் அரசியல் சதியின் போது ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்த தயாசிறி ஜயசேகர, தற்போது ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கில் இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே