நாகப்பட்டினம் செல்லும் படகில் தங்கக் கடத்தல் - 26 பேர் கைது!
காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லவிருந்த SG 423 என்ற பயணிகள் படகில், சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 26 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த நம்பகமான உளவுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் 17 இந்திய நாட்டினரும், ஒன்பது இலங்கை குடிமக்களும் அடங்குவர். சந்தேக நபர்களில் ஆறு பேர் பெண்கள் என்று சுங்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு அல்லது மதிப்பை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
விசாரணையின் ஒரு பகுதியாக, தங்கம் ஏதேனும் உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பதைக் கண்டறியும் சோதனைகள் உட்பட, மருத்துவப் பரிசோதனைகளுக்காக 26 பயணிகளும் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இலங்கை சுங்கத்துறை மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே