கட்டுநாயக்கவில் 37.7 கோடி ரூபா போதைப்பொருள் மீட்பு: பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைப்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட 'கோல்ட் ரூட்' (Gold Route) முனையத்தைப் பயன்படுத்தி, பெருந்தொகையான போதைப்பொருளைக் கடத்த முயன்ற வெளிநாட்டு மாணவர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு 37 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.
சந்தேகநபர் கனடாவிலிருந்து டுபாய் வழியாக இலங்கை வந்த விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த 2 பயணப் பொதிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் 146 பாக்கெட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 37.639 கிலோ கிராம் 'ஹசீஸ்' (Hashish) வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
விமான நிலைய வரலாற்றிலேயே விசேட வசதிகள் மற்றும் பாதுகாப்பு கொண்ட 'கோல்ட் ரூட்' முனையத்தைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய போதைப்பொருள் தொகை கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட டொமினிக்கன் குடியரசு மாணவர் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே