அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்: நீதிமன்றில் வழக்குப்பதிவு
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அநுராதபுரம் பெண் விசேட வைத்தியர் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தில், முன்னாள் இராணுவ சிப்பாய்க்கு எதிராக வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் நோய் பயிற்சி விசேட பெண் வைத்தியரை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தினுள் வைத்து கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, கல்நேவ பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாயும் முன்னாள் துறவியுமான சந்தேகநபர், 6 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கினை ஒரு விசேட வழக்காகக் கருதி, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணைகளை நடத்தாமல், சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாகவே அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது.
திருத்தப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 364 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், நீதிமன்றில் குற்றப்பத்திரிகைகள் வாசித்துக் காண்பிக்கப்பட்டதன் பின்னர், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், தான் குற்றமற்றவர் என்றும் பிரதிவாதி தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார்.
இந்த மேல் நீதிமன்ற வழக்கில் மொத்தம் 42 பேர் சாட்சியாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். அத்துடன், சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கத்தி, கைபேசி, ஆடைகள், கட்டில் விரிப்பு, முடி மற்றும் இரத்த மாதிரிகளுடன் தடயவியல் மருத்துவ அறிக்கையும் முக்கிய வழக்கு பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே