கிளிநொச்சியில் 30 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 20 டிப்பர்கள் பறிமுதல்
கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும் செயற்பட்ட 30க்கும் மேற்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்களை கிளிநொச்சி பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
வீதி விபத்துக்களைத் தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரால் இந்த விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த சில நாட்களாக இந்த விசேட சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டன.
இதன்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 30-க்கும் அதிகமான அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இலக்கத் தகடுகள் இன்றி வாகனங்களைச் செலுத்தியமை, முறையான சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி, வீதிப் பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணித்தமை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனங்களை ஓட்டியமை. போன்ற காரணங்கள் கண்டறியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேவேளை, உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 20-க்கும் அதிகமான டிப்பர் வாகனங்களும் இதன்போது கிளிநொச்சி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே