இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு திரும்ப அழைக்க ஏற்பாடு
யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் விரும்புகின்றபோது நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில்தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (17), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரையில் மீளக்குடியேறாமல் இருந்து வருகின்ற குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கென 1,259 மில்லியன் ரூபாவும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் 1,200 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும், யாழ் நகர சபைக் கட்டிட நிர்மாணிப்பிற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு திரும்ப விரும்புகின்றவர்களுக்கும் மீள்குடியேற்றத்திற்கான வசதிகளை வழங்க முடியும். நாட்டிற்கு வரவிரும்புகின்றவர்களை அழைத்து வருவதற்கான ஒழுங்கு முறைகள் தொடர்பாக இந்திய இராஜதந்திர தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகின்றேன் என்றார்.