நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: பசில்
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் நாட்களில் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கான சரியான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டாரகம பிரதேசத்தில் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது தொழிற்சாலையான 'Plexi Care' (Pvt) Ltd.ஐ திறந்து வைக்கும் நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிறுவனம் அந்நியச் செலாவணி வருவாயில் முக்கிய பங்கு வகிக்கும்.ஏனெனில் இந்த மருத்துவ சாதனங்களில் பெரும்பாலானவை 90 சதவீதம் வரை ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்டு நமக்கு அதிக அளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றன.
இது இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சனைக்கும் ஏதோ ஒரு வகையில் உதவுகிறது.
இம்மாதம் 25ஆம் திகதி உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது.அவர்களின் செயற்பாட்டின் மூலம் 2000 இலங்கை இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளது.
எனவே, தற்போது நாம் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் மிகவும் சாதகமான தீர்வை வழங்குவோம் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.