இலங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த கடல் பிராந்தியங்களில் கடற்றொழிலாளர்களை மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, வடகிழக்கு கடல் பிராந்தியத்தில் நிலைக்கொண்டுள்ள தாழமுக்கம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.