விபச்சார குற்றச்சாட்டு: மட்டு முன்னாள் மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
கடந்த 2016-10-24 ம் திகதி மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு முன்னாள் அமைந்துள்ள முன்னாள் மாநகர சபை மேயரான சிவகீர்த்தாவின் வீட்டிற்கு அருகில் நடாத்தி வந்த தங்கும் விடுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிசார் முற்றுகையிட்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயர் சிவகீர்த்தா மற்றும் அவரது கணவர் பிரபாகரன் உட்பட 09 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிசார் வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், மேயரின் கணவர் பிரபாகரன் உட்பட 05 பேர் பொலிஸ் பிணையில் முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேயர் சிவகீர்த்தாவுக்கு எதிராக மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் 3 மாத காலத்தின் பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்தார்.
கடந்த 4 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னாள் மாநகர சபை மேயரை 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.