ஜனாதிபதியை சந்தித்தார் பிம்ஸ்டெக் செயலாளர்
பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் (Tenzin Lekphell) இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
இன்று (08) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 06ஆம் திகதி பிம்ஸ்டெக் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட லெக்ப்ஹெல் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
பிம்ஸ்டெக் ஊடாக கட்டியெழுப்பப்படவுள்ள பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்தார்.
உறுப்பு நாடுகளுடனும் செயலகத்துடனும் இணைந்து இப்பிரதேச மக்களுக்கு நன்மைகள் நேரடியாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி, செயலாளர் நாயகத்திடம் தெரிவித்தார்.