பாகிஸ்தானுடன் இலங்கையை ஒப்பிட்ட சாணக்கியன்: குறுக்கிட்ட விமல்
அண்மையில் பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டதைப் போல, இனக் கலவரங்களின்போது தமிழ் இளைஞர்கள் இந்நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (08) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் எந்நேரமும் குண்டு வெடிக்கும் நிலைமைகளே காணப்படுவதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எம்மிடம் தெரிவிக்கிறனர்.
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியால் நாட்டின் எதிர்காலம் இல்லாமற்போகும். இதனால் ஜி.எஸ்.பி வரி சலுகைகளையும் இலங்கை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பலரும் தங்களது கவலையை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
1957, 1958ஆம் ஆண்டு உள்ளிட்ட கலவரங்களின்போது அரசாங்கத்தின் உதவியில் தமிழ் இளைஞர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் இளைஞர்கள் உயிரோடு வீதிகளில் வைத்து எறிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
இதன்போது குறுக்கீடு செய்த அமைச்சர் விமல் வீரவன்ச, நாட்டில் அரசியல் காரணங்களால் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது உண்மை. குறிப்பாக கொழும்பிலிருந்து சென்று யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை, பொலிஸாருக்கு விடுமுறை வழங்கி, இராணுவத்தை முகாம்களுக்கு அனுப்பிவிட்டு தாக்குதல் நடத்தியமை போன்ற சம்பவங்கள் காணப்படுகின்றன எனவும் கூறினார்.
ஆனால் இந்த சம்பவங்களுக்கும் பாகிஸ்தான் இடம்பெற்ற படுகொலையை ஒப்பிட வேண்டாம். மதத்தைக் காரணங்காட்டி ஒருவரை எரியூட்டி கொலை செய்வது என்பது மோசமானது எனவும் கூறினார்.
பிரியங்க குமாரவின் படுகொலைக்கு மத அடிப்படைவாதமே காரணமென கூறுகிறீர்கள். ஆம் நானும் அதையே கூறுகிறேன் என இதன்போது பதிலளித்த சாணக்கியன் எம்.பி, நாட்டில் பௌத்த அடிப்படைவாதம் உருவாக்கப்படுகிறது என்றார்.
1957 காலப் பகுதியில் நாட்டில் புலிகள் இல்லை. 1948ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டுவரையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாகவே அப்போதிருந்த அரசாங்கங்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேறவில்லை என்பதாலேயே ஆயுதம் ஏந்தினார்கள் என்றார்.