பண்டிகை காலங்கள் தொடர்பாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
பண்டிகை காலங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களை கேட்டுக் கொள்வதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 500 ஆகக் காணப்பட்ட நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை தற்போது 700 வரை அதிகரித்துள்ளமை விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
தொற்றாளர் எண்ணிக்கையை இதனை விட குறைவடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெவ்வேறு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய தொற்றாளர் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது பாரியளவில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும் , நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாமை அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
மகிழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்வுகளில் விருந்துபசாரங்களின் போது கொவிட் தொற்று அதிகமானோருக்கு பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
இதற்கு முன்னர் சிறிய கொத்தணிகள் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும், அலுவலகங்களில் ஒன்றாக உணவு உண்பவர்கள் மத்தியில் வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்பட்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எனவே பண்டிகை காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.