சென்னையில் கல்லுாரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்!

#India #School
சென்னையில் கல்லுாரி மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்!

கல்லூரி மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்கவும், பிரச்சனை ஏற்படுத்தும் ரீதியில் நடந்துகொள்ளும் மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கல்லூரி மாணவர்களிடையே தொடர் கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டு அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகியுள்ளது

. 'ரூட்டுத் தலை' விவகாரங்களில் பிரச்னை ஏற்பட்டு மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில், ரயில்களில் மற்றும் பொது வெளியில் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.

குறிப்பாக ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாநிலக் கல்லூரி முதுகலை மாணவன் குமார் என்பவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கேலி, கிண்டல் செய்து அடித்து அவமானப்படுத்தியதால், தான் சாகப்போவதாக தனது நண்பர்களுக்கு செல்போனில் ஆடியோ அனுப்பி ரயில் முன் பாய்ந்து மாணவர் குமார் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கவும், பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. குறிப்பிட்ட வழித்தடங்களில் சென்று வரும் பேருந்துகள் மற்றும் ரயில்களை தீவிரமாக கண்காணித்து மாணவர்களின தேவையற்ற மோதல்களை தவிர்க்க சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.