தமிழ் நாட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் உட்பட 3 பேர் கைது

#India #Tamil Nadu #School
தமிழ் நாட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் உட்பட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய பெற்றோர் இறந்து விட்ட நிலையில், அவருடைய பெரியம்மாவின் ஆதரவில் வளர்க்கப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த இவர், கடந்த 1 வருடத்திற்கு முன்பு தன் பெரியம்மா குப்பு வீட்டில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவருடைய பெரியம்மா சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெரியம்மா குப்பு செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பள்ளி மாணவியின் பெரியம்மா மகன் மோகன் (32), முதியவர் மண்ணாங்கட்டி வெங்கடேசன் (79) மற்றும் இளையராஜா (28) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையடுத்து மாணவியை மேலும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செஞ்சி காவல் நிலையத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

காவல் உயரதிகாரிகள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்த விசாரணை மேற்கொண்டதால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் என போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளதால் செஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்திய செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.