சட்டவிரோதமாக செயற்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி கைது

Kanimoli
2 years ago
சட்டவிரோதமாக செயற்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி கைது

எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி அண்மையில் மட்டக்களப்பு பகுதியில் வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் சந்தேகநபராக இனங்காணப்பட்ட நிலையில் பொலிஸ் சேவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த 56 வயதான சந்தேகநபர் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொலிஸ் சீருடை அணிந்து வருகை தந்து பல தடவை எரிபொருளை நிரப்பி சென்றுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் கடந்த 18 ஆம் திகதி மாலை எரிபொருள் நிரப்புவதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த நிலையில் இவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து,செவ்வாய்க்கிழமை(19) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் மீது சட்டவிரோதமாக பொலிஸ் சீருடையை அணிந்து நேர்மையற்ற முறையில் செயற்பட்டமை , அரச ஊழியர் போன்று நடமாடியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில்  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.