அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

Mayoorikka
2 years ago
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிக்க வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க எவ்வாறான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்பதை ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  
இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

 
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எமது தரப்பினருக்கு, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே பிரதான இலக்காக இருந்தது.

ஆனால், இந்த ஜனாதிபதியை தெரிவு செய்தவர்களோ, தங்களின் அரசியல் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டிருந்தார்கள்.

நாடாளுமன்றத்தின் அபிப்பிரயாத்திற்கும் மக்களின் அபிப்பிரயாத்துக்கும் இடையில் பாரிய வித்தியாம் உள்ளதை இதன் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி மாறிவிட்டார் என்பதற்காக, புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியாக இன்னமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.


 
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விஸ்வாசமும் இந்த அரசாங்கத்துக்கு கிடைக்கவில்லை.
மக்களால் வாழ முடியாத நிலைமையே நாட்டில் காணப்படுகிறது. வறுமானம் வரும் வழிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் மின்சாரக்கட்டணமும் உயர்வடையப் போவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மக்களால் நிச்சயமாக அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது போகும்.

மின்சாரம் இருந்தாலும், மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்படும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் 3, 4 மடங்காக அதிகரித்துள்ளன.
 
இதனை கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுதொடர்பாக ஜனாதிபதி உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் வேலைத் திட்டம் எவ்வாறு உள்ளது என்பதை மக்களுக்கு அவர் அறிவிக்க வேண்டும்.- என்றார்.