கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா

Kanimoli
1 year ago
 கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைப்பது தொடர்பில்  கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா

இந்திய முதலீட்டாளர்களின் உதவியுடன் மன்னார் ஒலைத்தொடுவாயில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்தொழில் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி இலவன்குடா கிராஞ்சி பகுதியில் தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் அத்துமீறிய மீன்படியில் ஈடுபடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், மன்னாரில் இந்திய தனியார் முதலீட்டாளர்களின் தலையீடு கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மன்னார், ஒலைத்தொடுவாயில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கடற்தொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் மற்றும், கலட்டை குஞ்சு பாரமரிக்கும் நிலையங்களை நவீன முறையில் அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நக்டா நிறுவனத்தின் முகாமைத்துவத்தில் செயற்படுத்தப்படுகின்ற, ஓலைத்தொடுவாய் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்திற்கும் இந்திய முதலீட்டாளர்களின் தொழில்நுட்பங்களை உள்வாங்கி, அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதலீட்டாளர்களை இன்று ஓலைத்தொடுவாய் குஞ்சு கருத்தரிப்பு நிலையத்தில் சந்தித்துக் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை மன்னாரில் கோந்தைப்பிட்டியில் உள்ள இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணிகளை பயன்படுத்துவதற்கு இரண்டு சமூகங்கள் ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில், மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களின் பங்குபற்றலுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தி, நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கும் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.