மனித கடத்தல் ஆயுத கடத்தல் மூலமே பணம் சம்பாதித்த விடுதலைப்புலிகள் - கம்மன்பில

Kanimoli
1 year ago
மனித கடத்தல் ஆயுத கடத்தல் மூலமே பணம் சம்பாதித்த விடுதலைப்புலிகள் - கம்மன்பில

விடுதலைப்புலிகள் வருமானம் பெறும் பிரதான வழியாக கப்பம் சேகரிப்பு இருந்தது என்றே பலரும் நினைக்கின்றனர்.

எனினும் மனித கடத்தல், ஆயுத கடத்தல், போதைப் பொருள் கடத்தல், தொல்லியல் பொருட்கள் கடத்தல், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குதல், கப்பல் சேவை, உணவகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலமே விடுதலைப்புலிகள் பணத்தை சம்பாதித்தனர் என்பதே கசப்பான உண்மை என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“விடுதலைப்புலிகள் இவ்வாறு சம்பாதித்த பணத்தை போரில் ஈடுபடவும் ஈழத்தை நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தினர்.

புலிகளின் காவல்துறை, நீதிமன்றம் என்பன நினைவில் இருக்கின்றதா? தொழில் வருமானம் கடந்த காலத்தில் போன்று தற்போதும் அவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்து வருகிறது.

எனினும் 2009 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு பிரதான செலவுகள் இல்லை. இதனால், வருடாந்தம் டொலர்கள் மில்லியன் கணக்கில் சேமிக்கப்பட்டு, தற்போது பிரிவினைவாதிகளிடம் பல பில்லியன் டொலர் நிதி இருக்கின்றது.

பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை மகிழ்வித்து, அவர்களிடம் இருந்து கடன் மற்றும் முதலீட்டை பெற்றுக்கொடுப்பதே எரிக் சொல்ஹெய்மின் பணி.

பிரிவினைவாதிகளின் டொலர் என்றாலும் எமது நாட்டில் முதலீடு செய்தவதை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி எமது நாட்டை அனாதரவாக்கிவிட வேண்டாம் என சிறிலங்கா அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள பட்டினியை போக்க, எமது நாட்டை மீண்டும் போர் நெருப்புக்குள் தள்ளிவிட்டால், அது மிகப் பெரிய குற்றமாகும்.

அதுமட்டுமன்றி, இலங்கைக்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்க முடியாது என இந்தியா அறிவித்துள்ளது. அதேவேளை சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது தொடர்ந்தும் ஒத்திவைக்கப்பட்டு வருவதால், உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை சீனாவின் உதவியும் கிடைக்காது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நிலையில், போர் ஒன்றில் சிக்கியுள்ளதால் ரஷ்யாவும் உதவ முடியாது என அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பாவாலும் உதவ முடியாது.

கடந்த காலத்தில் இருத்தரப்பு உறவுகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்ட ஜப்பான் கடனை மறுசீரமைக்க மாத்திரமே இணங்கியுள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியையும் எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் ஒரே எதிர்பார்ப்பு தமிழ் பிரிவினைவாதிகள் மாத்திரமே” எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.