நாட்டின் வருவாயை அதிகரிக்க இதுவே வழி - சஜித் தகவல்

Kanimoli
1 year ago
நாட்டின் வருவாயை அதிகரிக்க இதுவே வழி - சஜித் தகவல்

ராஜபக்ச குடும்பத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட எமது நாட்டின் செல்வத்தை மீட்டெடுத்து அதன் மூலம் அரச வருவாயை அதிகரிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குருநாகல் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (16) கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

திருடர்களைப் பிடிப்பதன் மூலமும், அவர்களால் திருடப்பட்ட டொலர்களை மீண்டும் நாட்டுக்குக்கொண்டு வருவதன் மூலமும் நாட்டின் வருமானத்தைப் பெருக்க முடியும்.

பெரும்தொகை பணம் இவ்வாறு நாட்டிற்கு வெளியே உள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே ஒரே தீர்வாக அமையும்.

நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து டொலர்களும் எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

வணிகங்கள், கேள்வியும் நிரம்பலும், விநியோகம், போன்றவற்றைச் சுருக்கி தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதே நடப்பு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாகும்.

தற்போது வட்டி விகிதம் கூட 30 சதவீதத்தை தாண்டிவிட்டது. தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தாது கோடீஸ்வரர்கள் மீது அந்த வரிச்சுமை சுமத்தப்பட வேண்டும்.

குருநாகல் நகரம் புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பெற்ற நவீன நகரமாக மாற்றப்படும். ஐக்கிய அமெரிக்க குடியரசிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்ற நகரங்கள் நம் நாட்டிலும் உருவாக்கப்படவேண்டும்.

நாட்டின் டொலர் நெருக்கடியைத் தீர்க்க தகவல் தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பரப்பவேண்டும்” என்றார்.