நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு

Kanimoli
1 year ago
 நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் எட்டு கைதிகளுக்கு இந்த விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் 04 கைதிகளை, அனுபவிக்க வேண்டிய தண்டனைக் குறைப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இரண்டு கைதிகள் மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட உள்ளனர், என்றார்.

விடுதலைப் புலிகளின் ஏனைய இரண்டு கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களை விடுதலை செய்வதற்குத் தேவையான உத்தரவுகளுக்காக சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.