யால பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Prathees
1 year ago
யால பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யால பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள், அவர்களின் அடையாள இலக்கங்கள், முகவரிகள் மற்றும் வாகன இலக்கங்கள் மற்றும் முறையற்ற நடத்தையை நிரூபிக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களும் வனவிலங்கு திணைக்களத்திடம் உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இவர்கள் எவரும் விசேட அனுசரணையின் கீழ் யால வனப் பூங்காவிற்குள் பிரவேசிக்கவில்லை எனவும், ஆனால் இவர்கள் சாதாரண சுற்றுலாப் பயணிகளின் குழு எனவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யால வனப் பூங்காவிற்கு ஜீப்களில் சென்ற இவர்கள், காட்டு விலங்குகளை துன்புறுத்தும் வகையில் திறந்த வெளியில் ஜீப்களை ஓட்டிச் சென்றுள்ளனர்.