உணவுப் பற்றாக்குறையினால் பாடசாலை மாணவர்கள் படிப்பை நிறுத்தியுள்ளனர்: அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Mayoorikka
1 year ago
உணவுப் பற்றாக்குறையினால் பாடசாலை மாணவர்கள் படிப்பை நிறுத்தியுள்ளனர்: அறிக்கை வெளியிட்ட  ஜனாதிபதி ஊடகப்பிரிவு

உணவுப் பற்றாக்குறையினால் பொலநறுவை- திம்புலாகலையின் 8 கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாடசாலைப் படிப்பை நிறுத்தியதாகக் கூறப்படும் செய்தி தவறானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனை அந்தந்த மாவட்ட பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், குறித்த பாடசாலைகளின் தரப்புக்கள் மற்றும் கிராம மக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திம்புலாகலையில் உள்ள 08 கிராமங்களில் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்வதை நிறுத்திவிட்டதாகவும், மேலும் அவர்கள் 'காடுகளில் இலைகளை தேடி உண்பதாகவும்' தலைப்புச் செய்தியுடன் நாட்டின் நான்கு முக்கிய தேசிய பத்திரிகைகள் திங்கட்கிழமை (31) செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் எழுத்துமூலமான விசாரணைக்கு பதிலளித்த பொலன்னறுவை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி மற்றும் திம்புலாகல வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அந்தச் செய்தி தவறானது எனத் தெரிவித்துள்ளனர்.

திம்புலாகலை பிரதேச செயலாளரும் ஏனைய அதிகாரிகளும் பூர்வீக வேட்டுவ சமூகம் வசிக்கும் பிரதான கிராமமான தலுகான பிரிவுக்கு சென்று இவ்விடயம் தொடர்பில் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளுக்கு காலை மற்றும் மதியம் உணவு வழங்குவதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்; குறித்த பாடசாலைகளுக்கு அதிகாரிகள் விஜயம் செய்திருந்த நிலையில், உணவுப் பற்றாக்குறையினால் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வராத பிள்ளைகள் எவரும் பாடசாலைகளில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான பிள்ளைகள் இருப்பதாகவும், குறிப்பாக பெற்றோரின் விருப்பமின்மையால் ஒரு சில பிள்ளைகள் இடையிடையே பாடசாலைக்கு வராதநிலை நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அதிபர்கள், பெற்றோருக்கு அறிவித்து அதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், நாளிதழ்களின் கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளபடி உணவு பற்றாக்குறையால் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வராத சூழ்நிலை இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.