உறுதிப் பத்திரம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

Prathees
1 year ago
உறுதிப் பத்திரம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

தோட்டங்களுடன் இணைந்த வரிசை வீடுகளில் வசிக்கும் மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் (06) நுவரெலியா நகரின் மையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டுக்கு பின்னர் 37,000 வரிசை வீடுகளுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 15,000 கையெழுத்துகளுடன் கூடிய மகஜர் ஒன்றை அனுப்பும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டம் நுவரெலியா நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு வீட்டுக் கடன் திட்டங்களுடனும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் தயாரிக்கப்பட்ட வீடுகளுக்கு இன்றும் தோட்டத் தொடர்புடைய சமூகத்தினருக்கு முறையான பட்டாவோ அல்லது உரிமைப் பட்டாவோ வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இவ்விடயம் தொடர்பில் அவசரமாக ஆராய்ந்து தமது தோட்ட வீடுகளுக்கான சட்ட உரிமைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.