இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும்!

Mayoorikka
1 year ago
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும்!

இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதன் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு, கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக உடன்படுவதற்கு இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் துறை கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஊக்குவித்துள்ளார்.

எகிப்தில் நடைபெற்ற COP27 மாநாட்டில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

இலங்கையின் சவாலான பொருளாதார மற்றும் சமூக நிலைமை மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டிய அவசரத் தேவை குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய கடன் நெருக்கடிக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான முக்கியத்துவத்தை உலக வங்கியின் தலைவர் வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொதுச் செலவினங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்தும் இதன்போது அவர்கள் விவாதித்துள்ளனர்.

மேலும் இலங்கை மக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நிலையான தனியார் துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் உலக வங்கி குழுவின் ஆதரவை டேவிட் மல்பாஸ் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளார்.