வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டை விற்க முயன்ற நபர் கைது

Prathees
1 year ago
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டை  விற்க முயன்ற  நபர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிரியல் கைக்குண்டு ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெலிஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பதில் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று ஜனகபுர பிரதேசத்தில் சோதனை நடத்தி கைக்குண்டை விற்பனை செய்ய எடுத்துச் சென்ற வேளையில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எப்படி கைக்குண்டு கிடைத்தது என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், கைக்குண்டை வாங்க முயன்றவர்கள் யார் என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜனகபுர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் அவரை கபிதிகொல்லாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெலிஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.