கல்வி அமைச்சருக்கு ரணில் பிறப்பித்துள்ள பணிப்புரை!

இலங்கையில், 2025ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
அரசியல்வாதிகளுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாத வகையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
மேலும் திட்டமிட்ட வகையில் இந்த வருடம் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளை அதே வருடத்தில் நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஆகவே, பரீட்சைக்கான குறிப்பிட்ட திகதி அறிவிக்கப்பட்டவுடன், மாணவர்கள் பரீட்சைகளுக்கு தயாராக இலகுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
எனவே 2025 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு சுமை ஏற்படாத வகையில் பரீட்சைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி, கல்வி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்நோக்கி வருவதாக, கல்வி சார் புத்திஜீவிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்து தெளிவூட்டியிருந்த பின்னணியிலேயே இந்த பணிப்புரையை அவர் விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



