கனடாவில் நடைபெற்ற 'கேப்டன்' விஜயகாந்த்' அஞ்சலி நிகழ்வு
![கனடாவில் நடைபெற்ற 'கேப்டன்' விஜயகாந்த்' அஞ்சலி நிகழ்வு](https://ms.lanka4.com/images/thumb/2024/01/1705631545.jpg)
கனடாவில் மறைந்த 'கேப்டன்' விஜயகாந்த்' அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக கடந்த 13-01-2024 அன்று சனிக்கிழமை நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத் தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கனடா-ஸ்காபுறோ நகரில் ஆரோசை இசைக்குழு மற்றும் ஆரபி புரடக்ஷன் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற 'கப்டன்' விஜயகாந்த் அவர்களுக்கான மரியாதை செலுத்தும் அஞ்சலி நிகழ்வு இனிதான பாடல்களோடும் மனதை நெகிழ வைக்கும் உரைகளோடும் அனைத்தும் அடங்கிய அடக்கமான விழாவாக நிறைவுற்றது. இந்த நிகழ்வு கனடா பைரவி நுண்கலைக் கூடத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு பைரவி நுண்கலைக் கூடத்தின் அதிபரும் 'ஆரோசை' இசைக்குழுவின் நிறுவனருமான திரு ஜெயச்சந்திரன் தியாகராஜா தலைமை வகித்தார். அங்கு கவிஞர் சயந்தன் அவர்கள் இறுக்கமான அஞ்சலிக் கவிதை ஒன்றை வாசித்தளித்தார். அஞ்சலி உரைகளை டாக்டர் போல் ஜோசப்.'உதயன்' லோகேந்திரலிங்கம் உட்பட சிலர் ஆற்றினார்கள்.
பிரபல தொலைக்காட்சி வானொலி அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான பிரசாந்த் அவர்கள் தொகுத்து வழங்கினார். அங்கு 'ஆரோசை' இசைக் குழுவினரால் அஞ்சலி நிகழ்வில் சேர்க்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் மிகுந்த உருக்கத்தை ஏற்படுத்துபவையாக விளங்கின. அஞ்சலி நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் இறுதிவரை இருந்து 'அமரர் 'கேப்டன்' அவர்ளுக்கு மரியாதை செலுத்தி மலர் அஞ்சலியும் செய்தனர்.