பழம்பெரும் பாலிவுட் நடிகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

Nila
3 years ago
பழம்பெரும் பாலிவுட் நடிகர் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அதன்பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கிட்டத்தட்ட பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் அவர் நடித்து உள்ளார் என்பதும் அவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார்.

இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நடிகர் திலீப் குமாரின் மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும். அவர் திரைத்துறை ஜாம்பவானாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “இந்திய சினிமாவில் திலீப் குமாரின் பங்களிப்பு அடுத்த தலைமுறைகளின் நினைவில் எப்போதும் இருக்கும். திலீப் குமாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான குவ்லா என்ற திரைப்படம்தான் திலீப் குமார் நடித்த கடைசி திரைப்படம் என்பதும் இந்த படத்திற்காக அவருக்கு பிலிம்பேர் விருதும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது