யூடியூப் வீடியோ பார்த்து ஏழு மாத கருவைக் கலைத்த கர்ப்பிணி

Keerthi
2 years ago
யூடியூப் வீடியோ பார்த்து  ஏழு மாத கருவைக் கலைத்த கர்ப்பிணி

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயதுப் பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த சாஹில் வஹாப் கான் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளார். சாஹில் அவருடன் கட்டாய பாலியல் உறவு மேற்கொண்டிருக்கிறார். இதனால் அப்பெண் கர்ப்பமானார். அவர் வயிற்றில் கரு ஏழு மாதங்கள் வளர்ந்துவிட்டது. டாக்டரிடம் சென்று இனி கருவைக் கலைக்க முடியாது என்ற நிலையில், சாஹிலிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டிருக்கிறார். அப்போது சாஹில், தனக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சாஹில், யூடியூப் வீடியோவை பார்த்து உடனடியாகக் கருவைக் கலைக்கும்படி கர்ப்பிணிப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அவர் சொன்னபடியே யூடியூப் வீடியோவை பார்த்து படிப்படியாகக் கருவைக் கலைக்க முயன்றிருக்கிறார். வெளிவந்த உயிரற்ற சிசுவுக்கு, தொப்புள் கொடியை எப்படி வெட்டுவது என்பதைக்கூட யூடியூப்பில் பார்த்துச் செய்திருக்கிறார் அந்தப் பெண். பின்னர், அந்த சிசுவை எடுத்துச் சென்று புதைத்துவிட்டார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் மும்பைக்கு சென்றிருந்த நேரத்தில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்ணின் பெற்றோர் மும்பையில் இருந்து வந்த பிறகு, இது பற்றி அவர்களுக்குத் தெரியவர, சாஹில் மீது போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாஹிலை கைது செய்து விசாரித்தனர்.

சாஹில் தன்னை கட்டாயப்படுத்தி பாலுறவு மேற்கொண்டதாகவும், சில நேரங்களில் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தன்னை உறவுக்கு உட்படுத்தியதாகவும் அப்பெண் போலீஸில் தெரிவித்துள்ளார்.

`டிரைவரான சாஹில் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமானவர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில், சாஹில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பலவந்தமாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்' என்று போலீஸார் தெரிவித்தனர்.

 புதைக்கப்பட்ட சிசுவின் உடலைக் கண்டெடுக்க காவல்துறையினர் தோண்டிப் பார்த்தபோது, கிடைக்கவில்லை. அது கிடைத்தால் டி.என்.ஏ சோதனை மூலம் குற்றத்தை நிரூபிக்க இயலும் என்று தெரிவித்துள்ள போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இளம்பெண் யூடியூப் வீடியோ பார்த்து சிசுவைக் கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.