தமிழ்நாட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறப்பு. தாய் மீது வழக்குப்பதிவு!

#India
தமிழ்நாட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறப்பு. தாய் மீது  வழக்குப்பதிவு!

இந்தியா, தமிழ் நாட்டில் ஒரு தாய் தன் நான்காவது குழந்தை என்பதால் அலட்சியமாக தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். இதனால், குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனையடுத்து அந்த தாய் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(38). நகை பட்டறை தொழிலாளியான இவருடைய மனைவி புண்ணியவதி (32). இவர்களுக்கு ஏற்கெனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், கர்ப்பமாக இருந்த புண்ணியவதி மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான இவர் வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தொப்புள் கொடியை சரியாக அறுக்காத நிலையில், பிரசவமும் சரியாக பார்க்காததால் தாயும் சேயும் மயங்கியுள்ளனர்.

இதையடுத்து 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சரியாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி, புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315- (குழந்தை இறந்து பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் உயிரிழப்பு ஏற்பட வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறன அசட்டைத்தனத்தால் ஒரு எந்தப்பாவமும் அறியா சிசு இறந்திருப்பது வேதனைக்குரியது