தமிழ்நாட்டில் திருநங்கையாக மாறிய மகனை, கொலை செய்த தாய்!

#India #Tamil Nadu #Murder
தமிழ்நாட்டில் திருநங்கையாக மாறிய மகனை, கொலை செய்த தாய்!

தமிழ்நாடு,சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை கொலை செய்த தாய் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் உமாதேவி(45). கணவரை பிரிந்து வசிக்கும் இவர் தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வருகிறார். 19 வயது நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி, தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. தனது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவ்வப்போது வீட்டில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் கடந்தவாரம் நவீன்குமாரை காயங்களுடன் மீட்ட அவரது தாய் உமாதேவி, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன்குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார்.

இந்நிலையில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் விசாரணையில் தாய் உமாதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உமாதேவியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்ற முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு நவீன்குமார் ஒப்புக் கொள்ளாததால், தனக்கு தெரிந்த நண்பர்களை கொண்டு அவனை அடித்து, வலுக்கட்டடாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது மூச்சுத்திணறி நவீன்குமார் இறந்துவிட்டதாக கருதி, அவரை தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மூச்சுத் திணறல் உடன் கவலைக்கிடமாக இருந்த நிலையில், மகன் நவீன் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அவரது தாயே அனுமதித்ததும், பின்னர் சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லாதது போல் நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், நவீன்குமார் மீது தாக்குதல் நடத்திய வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவகுமார் உள்பட ஆறு பேரையும் அதிரடியாக கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மகன் திருநங்கையாக மாறியதால் அவமானம் தாங்க முடியாத தாய், தெரிந்த நபர்களை வைத்து மகனையே அடித்துக் கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.