குடும்ப பிரச்னையால் திருமணமான ஐந்தே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு

#India #Tamil Nadu
குடும்ப பிரச்னையால் திருமணமான ஐந்தே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு

திருச்சி மாநகரம், பெரிய கடை வீதி, வரதராஜ பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த விஜயக்குமாரும், சினேகாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. பிரச்னை முற்றிய நிலையில், விஜயகுமார் கடந்த வாரம் தனது சொந்த ஊரான புள்ளம்பாடிக்குச் சென்று தாய்வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை விஜயகுமாரை தொடர்புகொண்ட அவரது மனைவி சினேகா தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்த சினேகாவின் தந்தைக்கும், உறவினர்களுக்கும் விஜயகுமார் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது சினேகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சினேகா, குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வரதட்சணை கொடுமையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.