அசத்தும் அதிசய ஐயர்ப் பெண். உண்மை சம்பவம்.

Reha
2 years ago
அசத்தும் அதிசய ஐயர்ப் பெண். உண்மை சம்பவம்.

பெயர் : ஜெயந்தி (பிராமணப் பெண்)
அப்பா : பட்டு குருக்கள் (சிவன் கோயில் அர்ச்சகர்)
படிப்பு : MA 
வேலை : மின்மயானத்தில் பிணங்களை தகனம் செய்யும் வேலை.
அவரே கூறுகிறார் கேளுங்கள்.
நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க. நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். M. A முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கவில்லை. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன.

என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா. நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக...
டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன். 

உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார். வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன். 

இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம். சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன்.

‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க. 
வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு நாங்க ரெண்டு பொம்பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல. 

இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும் போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம். 
ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும்.

அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன். ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன்.

சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன். 
இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.

இவரல்லவோ புதுமைப் பெண், பாராட்டுவோம் அவரது தன்னம்பிக்கையை, போற்றுவோம் ஜெயந்தியின் கடமையை...