ஒரு மாத சிறைவிடுப்பில் வெளியே வந்த நளினி!

Keerthi
2 years ago
ஒரு மாத சிறைவிடுப்பில் வெளியே வந்த நளினி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையின் தண்டனை கைதியான நளினி ஒரு மாத சிறைவிடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெளியில் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் தமிழகம் - வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை, சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு தமிழக அரசாங்கமும் ஒப்புதல் அளித்திருந்தது. இந்தநிலையில் நளினி ஒரு மாத சிறை விடுப்பில் இன்று வெளியே வந்துள்ளார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதியும் ஒரு மாத சிறை விடுப்பின் கீழ் நளினி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.